வேடன் கிலானி அன்று ஏரிக்கரை
யோரத்தில் ஏதோ ஒன்றைத் தேடுகிற
பணியில் ஈடுபட்டிருந்தான்.
""வா
ஆமையே! வா! உன்னைத்தான் வெகு
நேரமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். நீ இப்போதுதான் ஏரியைவிட்டே
வெளியே வருகிறாயா? இனி என்னிடம் மாட்டிக்
கொள்ளப் போகிறாய்! உன்னை இப்போதே பிடித்துச்
செல்கிறேன்... ஹி... ஹி... ஹி...''
என்று சிரித்தபடி, தன் பற்களை இளித்துக்
கொண்டு ஆமையை நெருங்கினான் வேடன்.
வேடனைக்
கண்டு ஆமை சற்றும் பயப்படவில்லை.
""வேடனே!
என்னைப் பிடிக்க நீ யார்?
என்னைப் பிடித்துக் கொன்று தின்பதற்கு உனக்கு
என்ன உரிமை இருக்கிறது?'' என்று
துணிச்சலுடன் வேடனைப் பார்த்து ஆமை
கேட்டது.
""ஆமையே!
நான் உன்னை விட மேலான
மனிதப் பிறவியில் இருப்பவன். எனக்கு எல்லா சக்தியும்
இருக்கிறது. உன்னைக் கொன்று தின்னவும்
என்னால் முடியும்! அதே நேரத்தில் உன்னை
உயிரோடு விட்டுவிடவும் என்னால் முடியும்.
""எனது
பெருமைகளைப்பற்றி உனக்கு எங்கே தெரியப்போகிறது!
நீ ஒரு அற்பமான பிறவி.
இந்த ஏரியில் அங்குமிங்குமாக அலைந்தபடி
இருக்கிற சிறிய உயிரினம் தானே
நீ! உன்னிடம் நான் பேசுவதற்கு என்ன
இருக்கிறது! உன் கறி சுவையாக
இருக்கும்...''
""நாங்கள்
உங்களைப் போன்ற மனித இனத்தை
எதிர்க்கும் சக்தி இல்லாதவர்கள் என்ற
ஒரே பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு தானே, வேடர்களாகிய
நீங்கள் எல்லாரும் எங்களைத் துன்புறுத்தி வருகிறீர்கள்!
""ஒருவேளை
உங்களை நேருக்கு நேராக எதிர்க்கிற ஆற்றலை
ஆண்டவன் எங்களுக்கு வழங்கியிருந்தால், நீங்கள் எங்களை இப்படித்
துன்புறுத்தி கறி சமைத்து சாப்பிடுவீர்களா?
இல்லை சாப்பிடத்தான் முடியுமா என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்!''
என்று காட்டமாகக் கூறியது.
ஆமையின்
பேச்சைக் கேட்டு வேடன் தடுமாற்றமடைந்தான்.
ஆமை பேசிய பேச்சுக்களை எல்லாம்
ஒரு கணம் அவன் நினைத்துப்
பார்த்தபோது, அதில் ஒருவித நியாயம்
இருப்பதாகவே அவன் மனதுக்குத் தென்பட்டது.
அறிவுள்ள
அந்த ஆமையைக் கூர்ந்து நோக்கிய
வேடன், ""ஆமையே! நீ கூறிய
புரட்சிகரமான கருத்துக்களை நான் ஆதரிக்கிறேன். என்னைக்
கண்டு பயந்து ஓடாமல், என்
முன்னே நின்று என்னை எதிர்த்து
துணிச்சலுடன் பேசிய உன் தைரியத்திற்கு
நான் தலை வணங்கி நிற்கிறேன்,''
என்று கூறினான்.
அதைக் கண்ட ஆமை, ""வேடனே!
நீ எனக்குத் தலை வணங்கி நிற்பதைவிட,
இனிமேல் என் போன்ற உயிர்களைத்
துன்புறுத்தாமல் இருந்தால் போதும்,'' என்றது.
ஆமையின்
பேச்சை மதித்து, தன் கையில் இருந்த
வில், அம்பு, ஈட்டி, கத்தி
முதலிய ஆயுதங்களைத் தூக்கி வீசியெறிந்தான் வேடன்.
"இனிமேல் எந்த உயிரையும் கொல்லக்கூடாது!'
என்று தனக்குள் முடிவெடுத்துக் கொண்டான்.
***
Comments
Post a Comment